Sunday, April 01, 2012

மகா பெரியவா- 15

‘காமாட்சிதாசன்’ சீனிவாசன், கிரகஸ்தர்தான். ஆனால் முறையே வருமானம் ஏதும் தொடர்ந்து வருவதில்லை. அதேநேரம், கடந்த 50 வருடங்களாக, தினசரி பூஜைக்கு ஒரு குறையும் இல்லை!

தேவி மகாத்மியம் பாராயணம் (700 ஸ்லோகம்), ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் (300 ஸ்லோகம்) மற்றும் நவாவர்ண அர்ச்சனை, ஸ்ரீமடத்தில் செய்வது போலவே ஸ்ரீருத்ரம், சமகம், தினமும் மூன்று கால பூஜை என அமர்க்களப்படும், அவரின் இல்லம்.

அவரின் வீடு ஸ்ரீகாமாட்சியின் அருளால் நிரம்பியிருந்தது; அவரின் மனம் பெரியவாளின் நினைவுகளிலேயே மூழ்கியிருந்தது. உணர்ச்சி மேலிட, சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார் காமாட்சிதாசன் சீனிவாசன்…

சர்வ தீர்த்தக் கரை. அங்கே பெரியவா காஷ்ட மௌனத்துல இருந்தார். உடம்பு ஒடிசலாக, ஒல்லியாக இருந்தது. ‘பெரியவா தூத்தம் (தண்ணீர்) கூடக் குடிக்கலை’ என அருகில் இருந்தவர்கள், வருத்தத்துடன் தெரிவித்தனர்.

அன்றைய தினம், காஞ்சிபுரத்துலதான் இருந்தேன். திடீர்னு ஒரு சேதி… ‘பெரியவா உத்தரவு, உடனே வா’ன்னு தகவல். பறந்தடிச்சுண்டு பெரியவாளைப் பார்க்க ஓடினேன்.

அன்னிக்குதான், புஷ்பங்களால மகா பெரியவாளை அலங்கரிக்கிற மாதிரி பாட்டு ஒண்ணு எழுதினேன். அந்தப் பாட்டையும் பெரியவாளோட அழைப்பையும் மனசுல நினைச்சுண்டே, அங்கே போய் நின்னேன்.

‘அவனை உள்ளே கூப்பிடு’ன்னு பெரியவாளோட குரல் நன்னாக் கேட்டுது, எனக்கு. உள்ளே நுழைஞ்சு, காஞ்சி மகானைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம், குழப்பம், வியப்பு, சந்தோஷம், பயம்னு எல்லாம் மாறிமாறி வர்றது. அங்கே… புஷ்பங்களால, பெரியவாளைப் பிரமாதமா அலங்காரம் பண்ணியிருந்தாங்க. அவரோட பீடத்துலேருந்து அவர் சிரசுல இருக்கற கிரீடம் வரை, எல்லாமே பூக்களால அலங்கரிக்கப்பட்டிருந்துது.

தடால்னு விழுந்து நமஸ்காரம் பண்ணினேன்; கண் லேருந்து ஜலம் அருவியாக் கொட்றது, எனக்கு! ‘இப்போ எனக்குப் பண்ணியிருக்கிற அலங்காரத்தை, நீ எழுதியே வைச்சுட்டியே! மனசுக்குள்ளே எப்பவும் என்னையே பாத்துண்டிருக்கியோ?!’னு கேட்டார்.

‘அடியேனுக்குக் காமாட்சியும் பெரியவாளும் ஒண்ணுதான், பெரியவா’ன்னு சொல்லிண்டே, திரும்பவும் நமஸ்காரம் பண்ணினேன்; கரகரன்னு அழுகை அதிகமாயிருந்தது எனக்கு.

‘சரி.. என்ன எழுதியிருக்கேனு படி!’ என்று பெரியவா சொல்ல… கண்கள் மூடி, பரவசத்துடன் அந்தப் பாட்டைச் சொன்னேன். அதன் அர்த்தம் இதுதான்…

‘எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் காமாட்சி அம்பாளின் சரணங்களாக விளங்குகின்றனவோ,
எந்த மகானுடைய சரீரம் முழுவதும் ஒரே புஷ்பமயமாக அலங்கரிக்கப்பட்டு விளங்குகிறதோ,
எந்த மகானுடைய சிரசில் புஷ்ப மகுடம் சோபித மாக விளங்குகிறதோ,
எந்த மகானுடைய ஞானப்பிரதானமான யோக தண்டம் முழுதும் புஷ்பத்தினால் சுழற்றப்பட்டு விளங்குகிறதோ,
எந்த மகானுடைய மார்பினில் கதம்ப மலர்களால் ஆன மாலைகளுடன் துளசி, வில்வ மாலைகளும் சர்வோத்திருஷ்டமாக விளங்குகிறதோ,
எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் புஷ்பமயமான பாதுகைகளின் மேல் வைக்கப்பட்டு ஞானப் பிரதானமாகி விளங்குகிறதோ-
அப்படிப்பட்ட காஞ்சி மகா சுவாமிகளின் பாதார விந்தங்களை, அடியேனின் சிரசில் சதா வைத்துக்கொள்வதில் பரமானந்த நிலை அடைகிறேன்!’

நான் பாட்டைச் சொல்லி முடிச்சதும், குவியலாக இருந்த பூக்களைக் கொஞ்சம் எடுத்துத் தன் சிரசின் மீது தூவிக்கொண்டார், பெரியவா.

பெரியவாளுக்கும், அவர் எப்போதும் வைத்திருக்கிற தண்டம் முதலானவற்றுக்கும் நான் வர்ணித்திருந்தது போலவே அலங்கரித்திருந்தனர். யாரோ ஒரு பெண்மணியின் நேர்த்திக்கடனாம் இது!

இப்படியரு மலர் அலங்காரத்தில் பெரியவாள் திருக்காட்சி தந்ததும், அதற்கு முன்னமேயே அப்படியொரு பாடலை அடியேன் எழுதியதும்… ஸ்ரீகாமாட்சியம்மையின் பெருங் கருணையன்றி வேறென்ன?! மகாபெரியவா என்னை அழைத்ததும், அங்கே புஷ்ப அலங்காரத்தில் காட்சி தந்ததும் என் பாக்கியம்! வேறென்ன சொல்றது?!” – நெகிழ்ச்சியுடன்

No comments: